சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாணவி பிரியா சரியானவுடன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீனிடம், அந்த மாணவிக்கு பேட்டரி கால்களை வாங்கித்தர அறிவுறுத்தியிருந்தோம். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தநிலையில், இன்று (நேற்று) அந்த குழந்தையின் இறப்பு என்பது மிகப்பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் கவனத்திற்கு அந்த குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி தமிழக அரசின் நிவாரணமாக ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று மாணவியின் சகோதரர்கள் 3 பேரில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.