




அலுவலர்களின் அலட்சியம் காரணமாக திருப்புவனம் அருகே பழையனூரிலிருந்து சம்பட்டிமடை கிராமத்துக்கு கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பழையனூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட சம்பட்டிமடை கிராமத்தில் சுமார் 80}க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பெரும்பாலான மக்கள் வேளாண், அதோடு தொடர்புடைய கால்நடை வளர்ப்பை மட்டுமே முதன்மைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பட்டிமடை கிராமப் பொதுமக்கள் கல்வி, மருத்துவம், அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான அடிப்படை பொருள்கள் வாங்குவதற்கு பழையனூர் கிராமத்துக்குச் சென்று வர வேண்டும். அதுமட்டுமின்றி, கட்டட வரைபட அனுமதி, வீட்டு வரி ரசீது பெறுவதற்கும் பழையனூர் கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும்.அந்த வகையில், சம்பட்டிமடையிலிருந்து பழையனூருக்கு செல்வதற்கு நீர் வளத்துறைக்குச் சொந்தமான கண்மாய் கரை பிரதான வழியாக உள்ளது.

அந்த வழியாகத் தான் சென்று வர வேண்டும்.இந்த வழியை தான் விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் கண்மாய் கரை சேரும், சகதியுமாக மாறி விடுகின்றன. இதன்காரணமாக, நடக்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது.மழைக் காலங்களிலும், இரவு நேரங்களிலும் சுமார் 2 கி.மீ தொலைவு உள்ள கண்மாய்க் கரை வழியில் செல்ல முடியாததால், அப்பகுதி பொதுமக்கள் குருந்தங்குளம், ஆனைக்குளம், அழகுடையான் வழியாக சுமார் 7 கி.மீ தொலைவுக்கு சுற்றித் தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே பழையனூரிலிருந்து கண்மாய்க் கரை வழியாக சம்பட்டிமடைக்கு சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பழையனூர் கண்மாய் கரையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மெட்டல் சாலை அமைப்பதற்கு உத்தரவிட்டார். ஆனால் நீர்வளத் துறை தடையின்மைச் சான்றிதழ் வழங்க தாமதம் ஆனதால், சாலை அமைக்கும் பணி தொடங்கவில்லை.
இந்த நிலையில், தற்போது நீர்வளத் துறை சார்பில் தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பழையனூர்}சம்பட்டிமடை கிராமத்துக்கு மெட்டல் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது : பழையனூர் முதல் சம்பட்டிமடை வரை மெட்டல் சாலை அமைப்பதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது உரிய காலத்தில் பணிகள் தொடங்கவில்லை. இதனால் திட்டத்துக்கான நிதி திருப்பி அனுப்பபட்டது.
தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கண்ட பகுதியில் சாலை அமைப்பதற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்படட்டது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். ஆனால் நீர்வளத் துறை தடையின்மைச் சான்றிதழ் வழங்காததால் குறித்த காலத்துக்குள் பணிகள் தொடங்கப்பட வில்லை.
கிராமத்தின் சார்பில் பொதுப்பணித் துறைக்கு உரிய விண்ணப்பக் கட்டணம், வழிகாட்டு நெறிமுறைக் கட்டணம் ரூ. 30 ஆயிரம் செலுத்தியவுடன் சான்றிதழ் வழங்கப்பட்டது.எனவே சாலை அமைக்கும் பணியை தொடங்குமாறு திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தோம். உரிய காலத்தில் பணிகள் தொடங்கப்படாததால் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியை பெற முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்தனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு பணிக்கு இரண்டு முறை திட்ட மதிப்பீடு தயாரித்து உரிய அனுமதி பெற்றும் நிதி வீணாகி உள்ளது. இது மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத நிர்வாகத்தை வெளிப்படுத்துகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து பழையனூர், சம்பட்டிமடை கிராமப் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெட்டல் சாலை அமைத்து தர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பொறியாளர் பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது : கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிர்வாக அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கும், தடையின்மைச் சான்றிதழ் கோரி நீர்வளத் துறைக்கும் கருத்துரு அனுப்பப்பட்டது. அப்போது, உரிய அனுமதி இல்லாததால் பணிகள் தொடங்க முடியவில்லை.
தற்போது, தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிதி பெற முடியாததால் சாலை அமைக்கும் பணியை தொடங்க முடியவில்லை. மீண்டும் திட்ட மதிப்பீடு தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்படும். உரிய அனுமதி பெற்றவுடன் பணிகள் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.

