தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம 70..60 அடியாக உயர்ந்தது. இதனை அடுத்து தமிழக அரசின் உத்தரவுப்படி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 1130 கன அடி தண்ணீர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்களால் திறந்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திறந்து விடப்படும் தண்ணீர் 120 நாட்களுக்கு தொடர்ந்து கால்வாய் வழியாக வெளியேற்றப்படும். 45 நாட்களுக்கு 1130 கன அடியும், அதனை அடுத்து 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 45 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.