ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து ராமேசுவரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு யாகம் நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 18-ந் தேதி ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்தார். அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி விட்டு ராமநாதசுவாமி கோவிலில் ருத்ராபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் அங்குள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 5 மணி நேரம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு யாகம் நடத்தினர்.அரசியலில் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய இந்த யாகம் நடத்தப்பட்டதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டமன்ற துணைத் தலைவர் பதவியை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் குடும்பத்துடன் சென்று ராமேசுவரத்தில் சிறப்பு யாகம் செய்துள்ளார். இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் குடும்பத்துடன் நீராடினார். இதை தொடர்ந்து ராமேசுவரம் மேல தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சிறப்பு யாகம் நடத்தினார். இருவரும் போட்டியாக யாகம் நடத்திய நிகழ்வு அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.