• Fri. May 3rd, 2024

விசிக பிரமுகர், அரசு ஒப்பந்தகாரர் வீடுகளில் ரெய்டு

Byவிஷா

Mar 9, 2024

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ்அர்ஜுனா வீடு உள்பட 10 இடங்களில்; அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜ் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. செல்வராஜ் நடத்தும் அருணாச்சலா இம்பாக்ஸ் என்ற நிறுவனம்தான் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அத்தியாவசிய பொருட்களை சப்ளை செய்து வந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விசிக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டில் காலை 8 மணி முதல் 6 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மதுபான பாரிலும் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவை தவிர, சென்னை வேப்பேரி, பாரிமுனை, தேனாம்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை என பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த இடங்களில் கிடைக்கும் ஆவணங்கள் அடிப்படையில் மேலும் சில இடங்களில் சோதனை விரிவடைய வாய்ப்புள்ளது எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *