• Sat. Apr 20th, 2024

ராகுல் காந்தியின் ஹிந்து ஹிந்துத்துவா கருத்து – விஷத்தைப் பாய்ச்சுகிறார் ராகுல்… பாஜக பதிலடி..!

Byமதி

Dec 13, 2021

ராகுல் காந்தி நாதுராம் கோட்சேவின் இரட்டைச் சகோதரர் போலத் தெரிகிறார் என நேற்று ராகுல் காந்தி கூறிய ஹிந்து ஹிந்துத்துவா பற்றிய கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

நேற்று ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசிய கருத்து பேசுபொருளாக மாறியது. “ இந்து வேறு இந்துத்துவா வேறு. இந்துத்துவாவாதிகள்தான் அதிகாரத்தை மட்டுமே விரும்புவார்கள். கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கிறார்கள். இந்துத்துவாவாதிகளை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டு உண்மையின் பாதையில் நடக்கும் இந்துக்களை ஆட்சியில் அமரவைக்க வேண்டும். இந்துத்துவாவாதிகளுக்கு அதிகாரத்தைத் தவிர அவர்களுக்கு ஒன்றும் தேவையில்லை. அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள். இந்த தேசம் இந்துக்களுக்கானது, இந்துத்துவாவாதிகளுக்கானது அல்ல” எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, ‘’ராகுல் காந்தி தன்னை இந்து என்றும் இந்துத்துவாவாதி அல்ல என்றும் கூறுகிறார். ஆனால், இந்த தேசம் என்ன சொல்கிறதென்றால், ராகுல் காந்தி, இந்துவும் இல்லை. இந்துத்துவாவாதியும் இல்லை. இந்துஸ்தானியும் இல்லை என்கிறது.

அதிகார ஆசையுடன் யார் இருக்கிறார்கள் என்பது இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும், சிறிய குழந்தைக்கும் கூட தெரியும். உங்கள் அதிகாரம் பறிக்கப்பட்ட கடந்த 1984-ம் ஆண்டு பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டீர்கள்.

இந்துத்துவா என்றால் சீக்கியர்களையும், முஸ்லிம்களையும் கொல்வது என்று ராகுல் காந்தி முன்பு பேசினார். இந்து மதத்தைப் பற்றிய ராகுல் காந்தியின் குடும்பத்தின் மனநிலை இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இந்துக்கள் காங்கிரஸுக்குப் பாடம் புகட்டுவார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் எப்போதும் தனது பேச்சுகள் மூலம் விஷத்தைப் பாய்ச்சுகிறார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்த தேசம் வளர்வதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சி ஆண்டபோதுதான் முசாபர் நகர் வன்முறை நடந்தது. அப்போது உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த விஷம் தடவிய வார்த்தைகள் எல்லாம் எதிர்வரும் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டன. குறிப்பாக உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துப் பேசப்பட்டவை.

இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா? உ.பி. மண்ணில் இதுபோன்று ஆத்திரமூட்டும் பேச்சுகளைப் பேச ராகுல் காந்திக்குத் துணிச்சல் இருக்கிறதா? முதல்வர் யோகியின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என ராகுல் காந்திக்குத் தெரியும். அதனால்தான் காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் சென்று ராகுல் பேசினார்.

ராகுல் காந்தி நாதுராம் கோட்சேவின் இரட்டைச் சகோதரர் போலத் தெரிகிறார். பாபுராம் சவுரேஸியா கோட்சேவின் தீவிரமான ஆதரவாளராக இருந்து, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர். ஏன் பாபுராம் பற்றி ஒருவார்த்தைகூட ராகுல் காந்தி பேசவில்லை. அவரை ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை. ராகுல் காந்தி கோட்சே பற்றிப் பேசுவார். ஏனென்றால் வெறுப்பைப் பரப்ப வேண்டுமே. பாஜக எப்போதுமே காந்தியின் வழிகளைப் பின்பற்றுகிறார்கள்”’ என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *