• Sat. May 17th, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பில் பாஜக அரசை பணிய வைத்து விட்டார் ராகுல் காந்தி…

ByAnandakumar

May 1, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பில் பாஜக அரசை பணிய வைத்து விட்டார் ராகுல் காந்தி என எம்பி ஜோதிமணி கரூரில் பேட்டி அளித்துள்ளார்.

கரூர் மாவட்டம், அப்பிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கேத்தம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்ற மே தின கிராம சபைக் கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டார்.

கிராம சபை கூட்டத்தை முடித்து கொண்ட பின்னர் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..,

ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடியது. தற்போது பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுக்க ஒத்துக்கொண்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்த போதெல்லாம் ராகுல் காந்தியை பாஜகவினர் கேலிக்குறியவராக சித்தரித்தார்கள். இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக பாஜகவை பணிய வைத்த வேலையை ராகுல் காந்தி செய்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினும், மைக்ரோ மைனாரிட்டி மக்களுக்கும் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார்.

100 நாள் வேலை திட்டத்தை பாஜக அரசு படிப்படியாக குறைத்து அதை நிறுத்தும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டம் அல்ல, அது 25 நாள் வேலை திட்டம். 25 நாள் வேலை செய்தும், 5 மாதமாக ஊதியம் வழங்காத சூழல் உள்ளது என்றார்.