• Sat. Apr 26th, 2025

லக்னோவை பந்தாடிய பஞ்சாப்- 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ByP.Kavitha Kumar

Apr 2, 2025

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது ஆட்டம் லக்னோ, பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று(இரவு) லக்னோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணியின் தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். ஐடன் மார்க்ராம் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 44 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஆயுஷ் படோனி பொறுமையாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்துல் சமத் 27 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின்பிரியான்ஷ் 8 ரன்களில் அவுட்டானார். ஆனால், பிரப்சிம்ரன் சிங் தொடக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 69 ரன்கள் குவித்தார். இவருடன் களத்தில் நின்ற ஷ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு 42 ரன்களை எடுத்தார். நேஹல் வதேரா 43 ரன்கள் எடுத்தார். இதனால் பஞ்சாப் அணி, 16.2 ஓவர்களில் 177 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்துள்ளது.