புதுக்கோட்டை மாவட்டத்தில் சப்- கலெக்டராக பணிபுரிந்து வரும் நாகர்கோவிலை சேர்ந்த ரேவதி என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை.
புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்து ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மகளிர் திட்ட அதிகாரி ரேவதி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திட்ட இயக்குனர் ரேவதி குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஆவார் இவரது வீடு நாகர்கோவில் வடிவீஸ்வரம் கீழ பள்ளத் தெருவில் உள்ளது.
இந்த வீட்டிற்கு இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வந்தனர்.
வீட்டில் ரேவதி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். 7 பேர் கொண்ட குழுவினர் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
வீட்டில் இருந்த ரேவதியிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்தனர் . தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மகளிர் திட்ட இயக்குனர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை நாகர்கோவில் முழுவதும் இறக்கை கட்டிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.