நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வீதியில் புதிதாக போடப்பட்ட கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்ட இளம்பெண்ணின் காலை துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். அதே பகுதியில் பாஸ்புட் உணவகம் நடத்தி வரும் இவரது மனைவி சுகன்யா தனது வீட்டின் முன்பு சுற்றிக் கொண்டிருந்த கோழியை காண்பித்து தனது 2வயது மகனுடன் விளையாடி கொண்டிருந்தார். இதையடுத்து வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தில் உள்ள சிறிய குழியில், கவனிக்காமல் கால் வைத்ததில் சுகன்யாவின் கால் குழிக்குள் சிக்கிக் கொண்டது. இதன்பின்னர் நீண்ட நேரமாகப் போராடியும் சிக்கிக் கொண்ட காலை மீட்க முடியாததால் அப்பகுதியினர் வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கான்கிரீட் கம்பிகளை வெட்டும் கருவி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு 30நிமிட போராட்டத்திற்கு பிறகு குழிக்குள் சிக்கிக் கொண்ட காலை பாதுகாப்பாக மீட்டனர். இதைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணின் காலை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்….