தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பெருமகளூர் ஆர்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராசேந்திரன். அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அடிக்கடி தேங்காய்கள் திருடுபோயுள்ளது. இதை கண்காணித்த வெங்கட்ராமன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கடையில் விற்பனைக்கு இருந்துள்ள தேங்காயைப் பார்த்ததும் அந்த கடைகாரரிடம் இதை யார் கொண்டு வந்து விற்பனை செய்தது என கேட்டுள்ளார். அதற்கு கடைகாரர், ராஜேந்திரன் கொண்டுவந்து விற்பனை செய்ததாக கூறியுள்ளார்.
ராஜேந்திரனை அழைத்த வெங்கட்ராமன் மற்றும் சிலர் தேங்காய் திருடியதை உறுதி செய்து, அதற்கு அபராதமாக ரூ 2 ஆயிரம் கட்டவேண்டும் என்றும் இனிமேல் தோப்புக்குள் நுழையக்கூடாது என கண்டித்துள்ளார்.இச்சம்பவம் ராஜேந்திரன் மனைவி பெரியநாயகத்திற்கு தெரியவர, அவமானம் அடைந்த ராஜேந்திரன் திருக்குளக்கரை அருகே உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி போலீசார் அரசு மருத்துவமனைக்கு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், ராஜேந்திரன் தற்கொலை செய்து கொள்ள வெங்கடேஷ் மற்றும் உறவினர்கள் சிலர் மிரட்டியது தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து நடந்த விசாரணையில் ராஜேந்திரனை தற்கொலைக்கு தூண்டியதாக வெங்கட்ராமன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.