• Sun. Mar 16th, 2025

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26: இன்று முதல் 3 நாட்கள் கருத்துக் கேட்பு கூட்டம்

ByP.Kavitha Kumar

Feb 18, 2025

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்தடுத்து மாநில அளவிலும் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழ்நாட்டில் 2025-26-ம் ஆண்டு நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை வேளாண் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அறிக்கைகள் மீது மக்கள் தரப்பில் இருந்தும், அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்தும், அமைப்புகள் தரப்பில் இருந்தும் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

இதன்படி இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை கூடிய முதல் நாளில் பொது நிதிநிலை அறிக்கையும், அடுத்த நாள் வேளாண்மை நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். இந்த சூழலில் இந்த அறிக்கைகள் குறித்து மக்களின் கருத்துகள் கேட்டு நிதிநிலை அறிக்கையை இறுதி செய்வதற்காக அரசுத் துறைகள் மற்றும் அது சார்ந்த அமைப்புகள், சங்கங்களுடன் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்திருந்தது

இந்த நிலையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கான கருத்துக் கேட்பு கூட்டம் இன்று ( பிப்ரவரி18) தலைமைச் செயலகத்தில் தொடங்குகிறது. இக்கூட்டம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இன்று ஊரக வளர்ச்சி துறை, மக்கள் நல்வாழ்வுதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நாளை வணிக வரித்துறை உள்ளிட்ட துறைகளுடனும், நாளை மறுநாள் (பிப்ரவரி 20) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.