தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஊத்துப்பட்டியில் அருள்மிகு சாஸ்தா திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தனிநபர் ஒருவர் கோவிலுக்குச் செல்லும் பாதையைத் தனது சொந்த நிலம் என்று கூறி, அங்கு வேலி அமைத்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால், அந்தத் தனிநபர் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்ததால், பொதுமக்கள் சின்னமனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால், காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின் முடிவில் காவல்துறையினர், “நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகளை நாங்கள் விசாரிக்கக் கூடாது; அது வட்டாட்சியர் (தாசில்தார்) மற்றும் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) தலைமையில் தான் விசாரணை செய்யப்பட வேண்டும். எனவே, நீங்கள் இங்கு வருவதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடி உங்கள் புகாரைத் தொடருங்கள்” என்று அறிவுறுத்தினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் இரவு நேரத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




