• Tue. Apr 22nd, 2025

ரேசன் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் அறிவிப்பு !!

ByVasanth Siddharthan

Apr 15, 2025

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டி பகுதியில் உள்ள வீரக்கோவில் பகுதியில் உள்ள 4.97 ஹெக்டேர் பரப்பளவை தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் இரண்டாவது பாரம்பரிய பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாங்கள் 800 வருடமாக பாதுகாத்து வரும் வீரகோவில் பகுதியை பொதுமக்களே பாதுகாத்து கொள்கின்றோம் எனவும் அரசின் இந்த உத்தரவு தங்களைக்கு தேவையில்லை என கூறி வந்தனர்.

இந்த நிலையில் இன்று நத்தம் பேருந்து நிலையம் முன்பு தமிழர் தேசம் கட்சி சார்பில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து அரசின் பாரம்பரிய பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்,ஊர் மக்களிடம் கருத்துகளை கேட்காமல் அறிவிப்பு செய்தது ஏன் என கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் சாரை,சாரையாக வாகனங்கள் மூலம் கலந்து கொண்டனர்.

தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே.கே.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முழக்கமிட்டனர். இந்த திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் அடுத்தகட்டமாக இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரவர் ரேசன் அட்டைகளை ஒப்படைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் பேசுகையில், காசம்பட்டி மக்கள் கோவிலை பாதுகாக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அடுத்து அவரது அமைச்சர் பதவியும் போகப்போகின்றது என விமர்சனம் செய்தார்.