காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் புனித நீராட ,பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் , கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து செல்கிறார்கள். மேலும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம். அதே போல் ஆடி மாதம் பிறப்பு மற்றும் ஆடி 18 ஆகிய நாட்களில் புதுமண தம்பதிகள் பலர் கூடுதுறைக்கு வந்து புனித நீராடி தாலி மாற்றி கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் ஆடி மாதம் பிறப்பையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.