இமாசலபிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் தனியார் பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 16பேர் பலியாகி உள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தின் நியோலி-ஷன்ஷேர் சாலையில் தனியார் பள்ளிப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள சைன்ஜ் ஜங்லா பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை 8 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெருவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்தபோது, அந்த பேருந்தினுள் குறைந்தது 40 மாணவர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் 16 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து குலு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குலு பேருந்து விபத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல பிரதேச கவர்னர், அம்மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குலு பேருந்து விபத்துக்கு இரங்கல் தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, 'தேசிய பேரிடர் மீட்பு படை' உதவிக்கு அனுப்பப்படும் என உறுதியளித்தார்.