குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய பிரதமர் அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் பேச்சு, அவர்களின் தரத்தை காட்டுவதாக விமர்சித்தார். வேலையிழப்பு, பொருளாதார பாதிப்பால் உலக நாடுகள் தள்ளாடும் நிலையில், அந்த பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். பத்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி ஊழல்களால் நிறைந்திருந்தது என குறிப்பிட்ட பிரதமர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
கடந்த 9 ஆண்டுகளாக, எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை முன்வைக்கவில்லை என்றும், தன் மீதான விமர்சனம் பிரச்னைகளை தீர்க்கும் என எதிர்க்கட்சியினர் நம்புவதாகவும் ராகுல் காந்தியை மறைமுகமாக சாடினார். முன்னதாக நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, அதானி குறுகிய காலத்தில் பணக்காரர் ஆனது எப்படி என்றும், பிரதமரும், அதானியும் எத்தனை முறை ஒன்றாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளனர் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், அதானிக்கு பல்வேறு ஒப்பந்தங்களில் பிரதமர் உதவுவதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால், பிரதமர் மோடி அளித்த பதிலில், அதானி கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.