இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நேற்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், பூங்குழலியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக நடிகை ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இப்படம் முதல் நாளில் வசூலை வாரிக் குவித்து உள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், அதேபோல் இப்படத்தின் இந்தி பதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.