தொல்காப்பியர் பூங்காவில் ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா ஆயிரம் ரொக்கம் , ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்காக ரூ.2357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை வழங்கினார். இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து ராம் ஆகியோருடன் நடை பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கி சிறப்பித்தார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 09 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.