சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் சுமார் 300- பெண்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து, கிடாவெட்டி அம்மனுக்குப் படையலிட்டு பத்ரகாளியம்மனை வணங்கி வழிபாடு செய்தனர். முன்னதாக மேள தாளத்துடன், தலையில் பொங்கல் பானைசுமந்தபடி, குடும்பத்தோடு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்ற பெண்கள், பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை வந்தடைந்து பின்னர் வரிசையாக பொங்கல் பானையில் பொங்கல் வைத்து குலவையிட்டு வணங்கி அம்மனை வழிபட்டனர்.

சிவகாசியில் பண்டைய காலம் முதல் மாசி மாதம் முத்தாலம்மனுக்கும், பங்குனி மாதம் மாரியம்மனுக்கும், சித்திரை மாதம் பத்ரகாளியம்மனுக்கும் திருவிழாக்கள் எடுக்கப்பட்டு நடந்து வரும் பொங்கல் விழாக்களை வரவேற்கும் விதமாக, கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக இணைந்து பொங்கல் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிவகாசியின் நன்மைக்காகவும், தொழில்களின் வளம் பெருகவும், சமுதாய ஒற்றுமைக்காகவும் பத்ரகாளியம்மனுக்கு ஜாதி பாகுபாடின்றி பொங்கலிட்டு, கிடா வெட்டி படையலிட்டு வணங்கி வரும் வழிபாட்டை தலைமுறை- தலைமுறையாக அம்மன் மீது நம்பிக்கை வைத்து நடத்தி வருவதாக பெண் பக்தர்கள் தெரிவித்தனர்.










