

சேலத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு எமதர்மன் வேடமணிந்து பாசக் கயிற்றை வீசி விழிப்புணர்வை ஏற்படுத்திய போக்குவரத்து காவலர்கள்.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்றது.
இதில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களை நிறுத்தி அவர்கள் மீது எமதர்மன் வேடமணிந்த நபர்கள் பாசக்கயிறு வீசி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு இருவரும் ரோஜாப்பூவை மற்றும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வேடமணிந்த நபர்கள் கையிறு வீசி விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
