பல்லடம் அருகே காவல் ஆய்வாளரின் மகனை கத்தியால் குத்தி பணம் மற்றும் நகை வழிப்பறி!!
வழிப்பறியில் ஈடுபட்ட மூவருக்கு பல்லடம் போலீசார் வலை வீச்சு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்லிஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமலைராஜன்.இவர் நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருகின்றார்.இவருக்கு செல்வி என்ற மனைவியும்.இரண்டு மகன்களும் உள்ளனர்.பெரிய மகன் பூபால கிருஷ்ணன் பல்லடத்தை அடுத்த அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார்.வழக்கம் போல பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் அவினாசிபாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.வாகனத்தில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.மாதப்பூர் அருகே செயல்படாத சுங்கம் அருகே வந்த பொழுது மீண்டும் அவினாசிபாளையம் செல்ல தனது பைக்கை திருப்பியுள்ளார்.அப்போது சாலையோரம் நின்றிருந்த வாலிபர் ஒருவர் பூபாலனிடம் லிப்ட் கேட்டுள்ளார்.இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பூபாலன் அவரை ஏற்றி கொண்டார்.வண்டியில் ஏறியவுடன் அந்த நபர் பூபாலனின் முதுகில் கத்தியை வைத்து மிரட்டி அருகில் இருந்த காட்டு பகுதிக்கு மிரட்டி அழைத்து சென்றார்.அங்கு பயன்பாடற்று கிடந்த கட்டிடத்திற்கு பூபாலனை அழைத்து செல்கிறார்.அங்கு ஏற்கனவே இரண்டு பேர் மறைந்திருந்த நிலையில் மூவரும் சேர்ந்து பூபாலனை சரமாரியமாக தாக்கி அவரது ஏ.டி.எம் கார்டை பறித்து கொண்டு மூவரில் ஒருவன் ஏ.டி.எம் நம்பரை வாங்கி பணம் எடுக்க சென்று விடுகிறார்.
அங்கிருந்த இருவர் பூபாலனை கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.ஏ.டி.எம்மில் இருந்து 13 ஆயிரம் பணத்தை எடுத்து மீண்டும் காட்டு பகுதிக்கு வந்த நபர் இரு சக்கர வாகனத்தையும்,பூபாலனையும் அங்கேயே விட்டு விட்டு மூவரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.படுகாயமடைந்த பூபாலன் இது குறித்து தனது செல்போன் மூலம் தகவல் அளித்தார்.
அதனை தொடர்ந்து தன்னுடன் பணி புரிபவர்களுக்கும் தகவல் அளித்தார்.அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி சவுமியா தலைமையிலான போலீசார் பூபாலனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.பூபாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் லிப்ட் கேட்பது போல் நடித்து பணம் மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.லிப்ட் கேட்பது போல் நடித்து காவல் ஆய்வாளரின் மகனை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.