தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சிவகாசி வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பட்டாசு உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் நேரில் சந்தித்து பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்தும், பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியும், கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சட்ட விதிகளை பின்பற்றி உரிமம் பெற்று பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளுக்கு உச்ச நீதிமன்றம் விதிமுறைகளை கடுமையாக்கி நெருக்கடி கொடுத்து வருவதால், சட்டவிரோத பட்டாசு உற்பத்தி பெருகுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினர் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) உபயோகப்படுத்தக் கூடாது.
சரவெடி தயாரிக்க கூடாது. பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடுகளால் பட்டாசு தொழில் நலிவடைந்து, அதன் சார்பு தொழில் நிறுவனங்களும் நசிந்து, இதன் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். எனவே பட்டாசு தொழிலை அழிவிலிருந்து மீட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.