

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எருமை மாட்டின் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் 46 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் மத்திய அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று எருமை மாட்டின் மூலம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு கொடுத்து அனுப்பும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும், லக்கிம்பூர் மாவட்டத்தில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
