பாஜக தலைவர் அண்ணாமலை கமல் குறித்து கூறிய கருத்துகளுக்கு மக்கள் நீதிமய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ..தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. நம்மவர் தன் தொழில் சார்ந்த சில விஷயங்களை படிக்க லாஸ் ஏஞ்சல் வந்திருந்ததை, ஓய்வெடுக்க வந்ததாக புறம் கூறியும், வந்த இடத்தில் கட்சிக்காரர்களை சந்தித்ததை கேலி செய்தும் பேசியுள்ளார். நம்மவரின் லாஸ் ஏஞ்சல் பயணத்தை பற்றி இவர் கலிபோர்னியாவிலிருந்து பேசுகிறார். கலிபோர்னியா எங்கே இருக்கிறது. நாமக்கல்லுக்கும் கரூருக்கும் இடையிலா இருக்கிறது. அதே அமெரிக்காவில் போய் அரசியல் பேசும் இவர் நம்மவரை கேலி செய்கிறார். ஒரு நேர்மையான அரசியலை கொண்டு வர முயலும் நம்மவரை குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை உணர்ந்து இனியாவது முன்னாள் காவலதிகாரி என்ற கவுரவத்திற்கு பங்கம் வராமல் பேசும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.