வெம்பக்கோட்டை ஒன்றியம் சிப்பிபாறையில் குடிநீர் ஆதாரத்திற்காக ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியை சிப்பிப்பாறை, சிப்பிப்பாறை காலனி, வால் சாபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஊரணி கடந்த 30 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

மேலும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக ஊரணியில் தண்ணீர் வருவது நின்றுவிட்டது. தற்போது மழை பெய்தால் ஊரணிக்கு ஓரளவு தான் தண்ணீர் வருகிறது. தண்ணீர் நிரம்பி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது வீட்டின் குப்பைகளை கொட்டும் இடமாக ஊரணியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசடைந்து துர் நாற்றத்தை ஏற்படுத்துகிறது. தண்ணீரில் துர்நாற்றம் ஏற்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் பரவுகிறது .
இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊரணியில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்கவும் , ஊரணி, வரத்து கால்வாய், படித்துறைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



