குரோம்பேட்டை பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரோம்பேட்டை 27வது வார்டு, கோதண்டம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், நீண்டநாளாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திருநீர்மலை பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
மேலும் ஓட்டு கேட்பதற்கு மட்டும் அம்மா ஓட்டு போடுங்க ஐயா ஓட்டு போடுங்க என்று கூறினார்கள் ஆனால் குடிநீர் வழங்கப்படவில்லை என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





