புதிய ஆட்சி தற்போது தான் அமைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படும் என பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி தெரிவித்துள்ளார்.

பல்லாவரம் தொகுதியில் பொதுமக்களின் புகார்களை எளிதாக பெறுவதற்காக “QR கோடு” கொண்ட செயலியை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த QR கோட்டை ஸ்கேன் செய்தால், மக்கள் நேரடியாக தங்களின் குறைகளை பதிவு செய்யலாம். இதுவரை 200க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கு படிப்படியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், பல்லாவரம் தொகுதியில் சாலை பழுதுபார்ப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், புதிய ஆட்சி என்பதால் சிறிய கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
முக்கியமாக வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு, பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவு செய்து, மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்வதே தனது முக்கிய நோக்கம் என தெரிவித்தார்.

அத்துடன், பாதாள சாக்கடைகளில் தேங்கியுள்ள கழிவுகள் காரணமாக நீர் வடிகால் பாதிக்கப்படுவதாக கூறி, அவற்றை சுத்தம் செய்து முறையாக மூடி அமைக்கும் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சி உறுதியளித்தார்.




