94-வது அகாடெமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது.
இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்களான ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றன. இந்திய திரைப்பட கூட்டமைப்பில் இருந்து மொத்தம் 15 நடுவர்கள், இந்த திரைப்படங்களை பார்வையிட்டனர்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் கூழாங்கல் தயாரிக்கப்பட்டது. இப்படத்தை பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில், 2022ம் ஆண்டின் ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாக கூழாங்கல் அமைந்துள்ளது என்ற செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்துக்கு “டைகர் விருது” பெற்றது.