பசும்பொன் தேவர் குருபூஜைக்கு 8,500 போலீசார் பாதுகாப்பு பணியில், 39 சோதனைச்சாவடிகள், 186 தடைசெய்யப்பட்ட வழித்தடங்கள், 200 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி தேவரின் 114வது ஜெயந்தி விழாவும், 59 குருபூஜை விழாவும் நடைபெற உள்ளது. இதையடுத்து தேவரின் நினைவிடத்திற்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக கூடுதல் காவல் துறை இயக்குனர் (சட்ட ஒழுங்கு) அவர்களின் மேற்பார்வையில், தென் மண்டல ஐஜி தலைமையில், நான்கு காவல்துறை துணைத்தலைவர், 19 காவல் கண்காணிப்பாளர், 28 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 70 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 8 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் 186 வழித்தடங்கள் தடை செய்யப்பட்டுள்ளதோடு, 39 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர். மேலும் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் உள்ளனர்.
மேலும் கலவரத்தை தடுக்கும் வாகனம் (வஜ்ரா) 10 இடங்களிலும், தண்ணீரை பீச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் வாகனங்கள் எட்டு இடங்களிலும், ஆம்புலன்ஸ் 16 இடங்களிலும், தீயணைப்பு வாகனங்கள் 18 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி கார்த்திக் தெரிவித்தார்.