• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் அரோகரா கோசத்தோடு பங்குனி தேரோட்டம்..

ByKalamegam Viswanathan

Mar 19, 2025

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து கிரிவலப்பதை வழியாக இழுத்து வந்தனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.பங்குனி பெருவிழா வாகும் 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி பெரு விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்துகொண்டு முருகப்பெருமான் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இரவு மீனாட்சி அம்மன் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் வழியனுப்பு விழா நடைபெற்றது.

தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் கிரிவலப்பாதையில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5: 45 மணிக்கு தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது.

தேரின் முன்பாக சிறிய சட்டத் தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு அரோகரா கோஷமிட்டபடி தேரை வரம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.