முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாகம் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த 3 ம் தேதி பழனி பெரியநாயகிஅம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டம் நிகழ்ச்சியில் எராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். முன்னதாக வள்ளி,தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திருக்கோவில் நிர்வாகிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.