சமூக சேவை, பொது நிர்வாகம், இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நூற்று இருபத்தி எட்டு பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
2022-ம் ஆண்டுக்கான இந்த பத்ம விருதுகள் அறிவிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் சிறப்பான பணி புரிந்தவர்களுக்கு மத்திய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் மறைந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட 17 பேருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விளையாட்டு வீரர் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது . எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம், நடிகர் சௌகார் ஜானகி ஆகிய 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அவ்வரிசையில், புதுச்சேரியை சேர்ந்த தவில் வித்வான் முருகையனுக்கு (58) பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடக்கத்தில் தந்தை விவேகானந்தனிடம் தவில் கற்கத் தொடங்கி, பின்னர் வளையப்பட்டி பத்மஸ்ரீ சுப்ரமணியத்தை குருவாக ஏற்று கலையின் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
அகில இந்திய வானொலியில் ஏ பிளஸ் கிரேட் கலைஞராக உள்ள முருகையன், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது 23 ஆண்டு கால பணியில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கியுள்ளார்.
நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டு வரும் தவில், நாதஸ்வரம் கலைஞர்களுக்கு அரசும், மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.