“ஒவ்வொரு மனிதரிடமும் ஐம்புலன்கள் என்ற பஞ்ச பாண்டவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இந்தப் புலன்களோடு இணைந்து செல்லும் மனம் என்ற திரௌபதி இருக்கிறாள். ஒவ்வொருவரிடமுமே விலங்குணர்ச்சி கொண்ட துரியோதனாதிகள் நூற்றுவர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மேலாகத் தூய அறிவாம் கண்ணபெருமானும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் வெளியிலும் அவர்கள் அறிந்தோ அறியாமலோ பாரதப்போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகம் உள்ள அளவும் இது நடந்துகொண்டுதான் இருக்கும்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொருவர் மேலோங்கி நிற்பார்கள். சிலரிடம் தருமன், சிலரிடம் பீமன், சிலரிடம் விசயன், சிலரிடம் துரியோதனன், சிலரிடம் கண்ணன் மேலோங்கி நிற்கலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட மனிதனிடமே சமயத்திற்கேற்றவாறு சிற்சிலர் மாறி மாறி ஆட்சி செலுத்துவதுமுண்டு.
மனிதனிடமுள்ள மனிதத் தன்மைக்கும் மனிதனிடமுள்ள விலங்குணர்ச்சிகளுக்கும் நடக்கும் போர் நிரந்தரமான ஒன்று. “