புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஒடுகம்பட்டி குடும்பம் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை விவசாயிகளை கண்டறிந்து திறமையான இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளை மூலம் விழிப்புணர்வும் இயற்கை விவசாயம் குறித்த விளக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் இன்று கொளுஞ்சி உயர்ச்சூழல் பண்ணை வளாகத்திற்குள் ஏராளமான விவசாயிகளின் பங்களிப்போடு இயற்கை விவசாயத்தினால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் நம் அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்து நம்மிடமே உள்ளது எனக் கூறி எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த மூலிகைச் செடிகள் பயன்படுகிறது என்ற விளக்கமும் இயற்கை விவசாயத்தினால் நம்முடைய தலைமுறைகள் எவ்வாறு செலுத்துவோம் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

மேலும் வன அலுவலர்கள் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு மரங்கள் நடுவதினால் நம்முடைய சுற்றுச் சூழல்கள் மாசு படுவதில் இருந்து தடுத்தும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் ஒரு அருமையான வாய்ப்பு என்றும் எந்தெந்த மரங்கள் எங்கு எங்கு நட வேண்டும் என்பது குறித்தும் விரிவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் விளக்கப்பட்டது. மேலும் இப்பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவருக்கும் மதிய உணவும் பல வகையான மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு வங்கி மூலமாக கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாதுகாத்து வைக்கப்பட்ட பாரம்பரிய நெல் விதைகளைக் காட்சிப்படுத்தியிருந்தனர். இயற்கை மூலமாக தயாரிக்கப்பட்ட குளியல் சோப், நாட்டுச் சர்க்கரைகள், அவல், கறிவேப்பிலைப் பொடி, செம்பருத்தி டீ, மஞ்சள் தூள் போன்ற பல பொருட்களையும் கண்காட்சிக்காக வைத்திருந்தனர். மேலும் சிறந்த முறையில் சென்ற ஆண்டு இயற்கை விவசாயத்தில் சாதித்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான விவசாயிகளும் பெண் விவசாயிகளும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர்.




