புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே பெரியதம்பி உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசைராஜ், நட்சத்திரம். இவர்கள் விவசாய வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களது விவசாயத்தினை காட்டுப் பன்றிகள், மான் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் தங்களது விவசாயத்தை கைவிட்டு விவசாய நிலத்தில் கொட்டகையிட்டு ஆடு மாடு கோழி வளர்க்கும் பணியைத் தொடங்கி பிழைப்பு நடத்திவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பதினோறு மணியளவில் ஐந்திற்கும் மேற்பட்ட வெறிநாய்கள் ஒன்று சேர்ந்து, ஆடு கோழிகளைக் கடித்து குதறியுள்ளது. சத்தம் கேட்டு வந்து பார்த்த சூசைராஜ் வெறி நாய்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்துக் குதறி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெறி நாய்களை சூசைராஜ் அவரது சகோதரர் அடைக்கலராஜுடன் விரட்டி அடித்து உள்ளனர்.

இருப்பினும் வெறிநாய்கள் கடித்ததில் எட்டு ஆடுகள் 30 கோழிகள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. இறந்த ஆடு மற்றும் கோழிகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் மதிப்புடையதாக கூறப்படுகிறது. வெறி நாய் கடித்து உயிரிழந்த ஆடு மற்றும் கோழிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் வெறிநாய்களை பிடித்து அப்புறப்டுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





