தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையான ஆடை அணிவதில்லை என்பதால் ஆடை கட்டுப்பாடு விதிகளை குறித்து கோவில்களின் முன், விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் கோவில்களில் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் இதுபோன்ற பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில புகைப்படங்களை தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் முறையற்ற ஆடைகளை அணிந்து செல்வதாக மனுதாரர் ரங்கராஜன் குற்றம் சாட்டினார். எனவே ஒவ்வொரு கோவில்களும் விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளது என்பதால், ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் இந்த விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக கோவில் நிர்வாகங்கள் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை நிறைவு செய்தனர்.