தமிழகத்தில் வடகிழக்கு பருவமளை துவங்கியுள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல் காரணமாக வடகிழக்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் இன்று சற்று முன் தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் கனமழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (அக். 29) கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த பருவ மழை தீவிரமடைந்து நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் அதி தீவிர கனமழையாக மாறும். மேலும் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.