தமிழகத்தில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
தற்போது 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்தனர். தொடர்ந்து சானிடைசர் கொண்டு கையை சுத்தம் செய்தனர். பின்னர் முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள் வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து வராத மாணவர்களுக்கு பள்ளிகள் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது.