• Fri. Apr 19th, 2024

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு..,
நேரு நினைவு கல்லூரி சி.வி.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா..!

ByKalamegam Viswanathan

Mar 8, 2023

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி சி.வி.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா 07.03.23 செவ்வாய்க்கிழமை அன்ற மாலை சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சியின் முதல் தொடக்கமாக விடுதி காப்பாளர் முனைவர் அனிதா அனைவரையும் வரவேற்றார். இந்த மகளிர் தின நிலா திருவிழா நிகழ்ச்சியை தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தலைமை உரையில் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. சூரியன், நிலா, காற்று மற்றும் இயற்கை ஆகிய அனைத்துமே மனிதனுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோலவே மனிதனும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். நிலவின் இயக்கம், நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் விதம் குறித்தும் எடுத்துரைத்தார். பெண்கள் கடின உழைப்பின் மூலம் சிறந்து விளங்குகிறார்கள். அனைத்து மாணவிகளும் பல்வேறு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் முதலாக விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.
கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். அதில் நிலவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தான் அனைவருக்கும் தெரியும். இரண்டாவதாக வருபவர்களை உலகம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆகவே அனைவரும் தங்கள் துறையில் முதன்மையாக சிறந்து வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
மேலும் மகளிர் தின சிறப்பு பரிசாக விடுதியை குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக மேம்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர் பொன்பெரியசாமி, விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கி வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.


இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம் வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் மாணவிகள் அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள், ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நான்கு நாட்களுக்கு 250 க்கு மேற்பட்ட மாணவிகள் முதல் முறையாக தொலைநோக்கி வழியாக நிலவு மற்றும் கோள்களை கண்டு களித்து வியப்படைந்தனர். இந்த நிகழ்ச்சியை என்எம்சி ஆஸ்ட்ரோ கிளிப் மாணவிகள் ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *