நாளை ரத சப்தமி நாளை முன்னிட்டு, திருப்பதியில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த ஒரே நாளில் மட்டும் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறுகிறது. இந்த நாளை மினி பிரம்மோற்சவம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
ரத சப்தமியன்று காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிக்க உள்ளார். அன்று காலை 6.40 மணிக்கு சூரிய உதயம் ஆகும். அதன் பிறகு காலை 9 மணி முதல் 10 வரை சிறிய சேஷ வாகன சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிக்க உள்ளார்.
மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமன் வாகன சேவை நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 3 வரை சக்ர ஸ்நானம் நடைபெறுகிறது. மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வ பூபால வாகனத்திலும் மலையப்ப சாமி காட்சியளிக்க உள்ளார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஊர்வலம் நடைபெறுகிறது.
ரத சப்தமியை முன்னிட்டு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலா மற்றும் அர்ச்சனை ஆகியவை தனியாக செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.