• Wed. May 1st, 2024

இன்று சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

Byவிஷா

Feb 15, 2024

சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இன்று பிப்ரவரி 15ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒரு சேர தொடங்கி நடைபெற உள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி முடிவடையும்; 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 2 அன்று முடிவடைகின்றன. 10-ம் வகுப்புக்கான முதல் நாள் தேர்வுத் தாளாக ஓவியம் உள்ளிட்டவையும், 12-ம் வகுப்புக்கு முதல் தேர்வாக தொழில்முனைவு உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.
பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என்றும் மாணவர்கள் காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும் என்றும் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தேர்வு எழுத வரும் அனைத்து மாணவ மாணவியரும் பள்ளி சீருடைகளை அணிய வேண்டும் என்றும், சிபிஎஸ்இ வாரியத்தால் அனுமதிக்கப்படாத எதையும் தேர்வறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒளி புகக்கூடிய பிளாஸ்டிக் பவுச், அடையாள அட்டை, பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை மட்டுமே தேர்வறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஸ்மார்ட் வாட்ச் அல்லது கால்குலேட்டரை உள்ளடக்கிய வாட்ச் போன்றவை முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், அத்தியாவசியமான ஒரு சில பொருட்களை வெளிப்படையான பை அல்லது பாக்ஸில் வைத்து தேர்வறைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் சர்க்கரை மாத்திரைகள், சாக்லேட், பழங்கள், சான்ட்விச், மருத்துவர் பரிந்துரையின் கீழான மருந்துகள், 500 மிலி தண்ணீர் பாட்டில், குளுக்கோமீட்டர் மற்றும் அதற்கான பரிசோதனை பட்டை உள்ளிட்டவற்றில் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *