தேனி மாவட்ட மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு, சோல்ஜர் அகாடமி, மனிதநேய காப்பகம் சார்பில் ‘ஒமைக்காரன்’ வைரஸ் குறித்த, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தேனி புது பஸ் ஸ்டாண்டில் துவங்கிய இப்பேரணியை, மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் எம்.கே.எம்., முத்துராமலிங்கம் தலைமை வகித்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ராஜன் விஷால், சோல்ஜர் அகாடமி நிர்வாகி சின்னச்சாமி முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் தொண்டு நிறுவன பணியாளர்கள், தேனி சோல்ஜர் அகாடமி மாணவர்கள், காப்பக குழந்தைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். முகக்கவசம் இன்றி ரோட்டில் நடந்து சென்றவர்கள் மற்றும் டூவீலர் வாகன ஓட்டிகளுக்கு ‘மாஸ்க்’ வழங்கினர். புது பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், பாரஸ்ட் ரோடு, பங்களா மேடு வழியாக சென்று பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. இதற்கிடையில், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று குறித்து ஒலி பெருக்கி மூலம் ஆட்டோவில் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் பாண்டி, இணை செயலாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.