முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது, ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன் மற்றும் எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தனர். அதில், தங்களுக்கு எதிராக புகார் அளித்தவர் மீது பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளன. விஜய் நல்லத்தம்பி, ராஜேந்திரன் ஆகியோருக்கு எதிரான புகாரில் தன் பெயர் சேர்க்கப்படவில்லை. தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வேலைக்கு பணம் வாங்கியது மட்டுமல்லாமல், கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது என தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து இடையீட்டு மனுதாரர்கள் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 24 தேதிக்கு தள்ளிவைத்த நீதிமன்றம், அதுவரை ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கை கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் விஜய்நல்லதம்பி கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் விலைவித்தாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.