• Fri. Mar 29th, 2024

சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்

ByA.Tamilselvan

Mar 30, 2023

தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில் தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை தவிர்த்து அதற்கு பதிலாக “தஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விதியை பின்பற்றாத பட்சத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆவின் மற்றும் நந்தினி அமைப்புகளின் உரிமைகளை ரத்து செய்யும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


..!! இது தொடர்பாக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #StopHindiImposition. குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுக்களில் “தாஹி” என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *