மத்திய அரசு கொண்டுவந்துள்ள மசோதாவால் இலவச மின்சார திட்டத்துக்கு பாதிப்பு ஏற்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“மின்சார திருத்த சட்ட மசோதா ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள் என ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், அந்த மசோதாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.நாடாளுமன்றத்தில் இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது, நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு மிக கடுமையாக எதிர்ப்பு குரலை பதிவு செய்து, திமுகவின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னார்.
மின்சார திருத்த சட்ட மசோதாவால், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரம் பெறும் நுகர்வோர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.
சாமானிய மக்களுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தும் மசோதா என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்” என்றார்.