மதுரை புரட்சித்தலைவர் காலணி பகுதியில் டாக்டர் டி. திருஞானம் துவக்கப் பள்ளி சார்பில் நிலாச் சோறு நிகழ்ச்சியை நடத்தினார். பிடிக்காலணி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்தின் தலைவர் இராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சி குறித்து இராஜமாணிக்கம் பேசுகையில், “பண்டைய காலத்தில் வானம் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. கிரகங்களின் நிலையை வைத்து விவசாயம், மீன்பிடித்தல் தொழிலை செய்தனர். வானத்தை நவீன அறிவியல் தொழில்நுடப்ம் மூலம் புரிந்து இருக்கிறோம்” என்றார். ஆசிரியை பாக்யலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தலைமையாசிரியர் க.சரவணன் பேசும் போது, ” எல்லா இடங்களிலும் அறிவியல் இருக்கிறது. நாம் பார்க்கும் விசயத்தில் உண்மை இருக்குமானால் அது அறிவியல் ஆகும். காற்று வீசுவதற்கு சூரியனே காரணம். வெப்பத்தினால் காற்று லேசாகி மேலே செல்கிறது. மேலே செல்லும் காற்றை இருந்த இடத்தை நிரப்ப அருகில் உள்ள குளிர்ந்த காற்று வருகின்றது. இதனால், காற்று வீசுகிறது. மாணவர்கள் உற்றுநோக்கல் மூலம் அறிவியல் மனப்பான்மையை பெற முடியும்” என்றார்.
வானம், வான் பொருட்கள் குறித்து சிவராமன் விளக்கமளித்தார். சுமார் ஜம்பதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தொலைநோக்கி வழியாக நிலா போன்ற வான் பொருட்களை கண்டு களித்தனர். நகர்புற வாழ்விட மேம்பாட்டு கழகம் சமூக அலுவலர் குப்பு ஜோதி குமார், தெற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் த.கணேசன் , பேரா.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.