• Fri. Apr 19th, 2024

சென்னை உள்பட 10 நகரங்களில் என்.ஐ.ஏ.ரெய்டு..!

Byவிஷா

May 9, 2023

தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) ரெய்டு நடத்தி வருகிறது.
என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் இன்று காலை முதலே தீவிர சோதனை நடத்திவருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத அமைப்புளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் தொடர்பில் உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேதாஜி நகரில் உள்ள தடைசெய்யப்பட்ட அமைப்பின் முன்னாள் மண்டலத் தலைவர் முகமது கைசர் வீட்டில் சோதனை நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் என்ஐஏ சோதனை நடந்து வருகிறது.
தேனியில் கம்பம்பட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச் செயலாளர் சாதிக் அலி வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிடுகிறார்கள். சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தஞ்சையைச் சேர்ந்த பயணி முகமது அசாப் என்பவரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று என்ஐஏ சோதனைக்கு உள்ளாகி இருக்கும் தடை செய்யப்பட்ட அமைப்பினர், சில அண்மையில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்குத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
இதற்கு முன்பாக கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் தமிழகத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் அருகே கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார். இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில் அவரது வீட்டில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை கடந்த மார்ச் 10ஆம் தேதி 5 பேரிடம் விசாரணை நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *