• Mon. May 20th, 2024

காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் பிரதே பரிசோதனையில் புதிய திருப்பம்

Byவிஷா

May 7, 2024

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உயிரிழந்த பிறகே தோட்டத்தில் எறியூட்டப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உயிரிழப்பில் பல்வேறு மர்மங்கள் மறைந்திருப்பதாக தெரிகிறது. இதோடு கிடைக்கப்பெறும் ஆதாரங்களும், தகவல்களும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. முதலில் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் கொலையா இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
ஜெயக்குமார் எழுதியதாக இரண்டு கடிதங்கள் வெளிவந்தது. குறிப்பாக கடந்த 30ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதியதாக வெளிவந்தது. அதன்பின் 27 ஆம் தேதி மற்றும் 30ஆம் தேதி அவரது மருமகனுக்கும் குடும்பத்தாருக்கும் எழுதியதாக 2வது கடிதம் வெளிவந்தது. முதல் கடிதத்தில் பத்து நபர்களை தொடர்புபடுத்தியும், இரண்டாவது கடிதத்தில் 26 நபர்களை தொடர்புபடுத்தியும் மொத்தமாக 36 நபர்கள் பெயர்கள் இரு கடிதங்களிலும் இடம்பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தங்கபாலு ரூபி மனோகரன் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளது. தொழிலதிபர்கள் அரசு அலுவலர்கள் பெயர்களும் இடம் பெற்ற நிலையில் அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயக்குமார் யார் யாரிடம் பணம் கொடுத்துள்ளார்? எவ்வளவு பணம் யார் தர வேண்டும்? யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை அவர் அதில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அந்த கடிதங்கள் இரண்டையும் தடய அறிவியல் அலுவலர்கள் ஆய்வு செய்த நிலையில், அவரது பழைய கடிதங்களில் உள்ள எழுத்துக்களை ஒத்துப் பார்த்தும், அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தும், கடிதங்கள் இரண்டையும் எழுதியது ஜெயக்குமார் தான் என்பதை தடய அறிவியல் அலுவலர்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி அவரது உடல் அவரது தோட்டத்தின் ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் மேலும் அதிர்ச்சி தகவல் இருப்பதாக தெரிய வருகிறது. இறந்த ஜெயக்குமாரின் உடலில் அவரது குரல்வளை முற்றிலும் எரிந்து போய் இருக்கிறது என்றும் அவரது நுரையீரலில் எவ்வித திரவங்களும் இடம்பெறவில்லை என்றும் தெரிகிறது.
ஏற்கனவே உயிரிழந்த நபரை எரியூட்டினால் மட்டுமே குரல்வளை முற்றிலும் எரிந்து போகும். நுரையீரலில் திரவங்கள் ஏதும் இருக்காது என்பது மருத்துவர்களின் தகவலாக உள்ளது. இதன் மூலம் ஜெயக்குமார் உயிரிழந்த பிறகே அவரது சடலம் தோட்டத்தில் எரியூட்டப்பட்டு இருக்கலாம் என்பது மருத்துவ அறிக்கை தகவலாக உள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது. கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதால் விசாரணையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. உடற்கூறு பரிசோதனையின் முடிவுகள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டு விட்டாலும் இதனை உயர் மருத்துவ குழுவினர் உறுதிப்படுத்துவதற்காக சென்னைக்கு உடற்கூறு பரிசோதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜெயக்குமாரின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்ட பின் அவரது வீட்டில் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி கொண்டு இருந்த சமயத்தில் அவரது மனைவி ஜெயந்தி இது என்னுடைய கணவர் ஜெயக்குமார் இல்லை. வேறு ஒருவருடைய உடல். ஆகவே என்னுடைய கணவரை கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள் என அழுதவரே கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெயக்குமார் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட துக்க ஆராதனை நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். இருப்பினும் தன் கணவர் இறந்ததை முழுவதுமாக நம்பாத ஜெயந்தி, தன் வீட்டில் வைத்து நடத்தக் கூடாது என கூறினார். இதனையடுத்து அவர் வீட்டில் அருகில் இருந்த பள்ளியில் வைத்து துக்க ஆராதனை கூட்டம் நடந்தது. இதனால் தன்னுடைய மகனிடம் டிஎன்ஏ சோதனை நடத்துமாறு ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி கூறினார். இதனை அடுத்து தாயின் வேண்டுகோளை ஏற்று அவரது மகன் கருப்பையா ஜெப்ரின் டிஎன்ஏ சோதனை நடத்த உள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இந்த சூழலில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை முடுக்கியுள்ள நிலையில் ஜெயக்குமாரின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில் தற்போது ஜெயக்குமாரின் மகன்கள் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மூத்தமகன் கருத்தையா ஜெப்ரின், இளையமகன் மார்ட்டீன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பில் ஏற்பட்டுள்ள மர்மங்களுக்கு விரைவில் விடை கிடைக்குமா? என்ற கேள்விகளோடு அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *