தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது” என, மருத்துவ கல்லூரி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியதாவது; அரசு மருத்துவர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது.இடமாறுதல் பெற்றவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்து விட்டனர். அவர்களின் முழு விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த தகவல்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விரைவில் அறிவிப்பார். கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என்பது குறித்து அப்போது அறிவிக்கப்படும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக பணம் வசூலிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நலன் கருதியும் இந்த ஆண்டு புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட மாணவர், அதற்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவிடம் செலுத்திவிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சேர்க்கை கடிதத்தை மட்டும் மாணவர்கள் கொண்டு சென்றால் போதும். மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும்” என்று அவர் கூறினார்.